Wednesday 16 December 2015

கந்த சஷ்டி கவசம் பாகம் -3.
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா  மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்  சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே  பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே  கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா  தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா  பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா  செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே  காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட  எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக  ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய  பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக  அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

மெத்தமெத் தாக வேலா யுதனார்  சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

உலக மக்கள் அனைவரும் நமக்கு உறவாக வேண்டுகின்றோம் .
அடுத்து மனம் பரவச நிலையை( Trans state)  அடைய முருகப்பெருமானின்  பெருமைகளைக் கூறி மனதை ஓர் உயர் நிலைக்கு , ஆழ் நிலைக்கு, பரவசநிலைக்கு கொண்டுசெல்லும் வரிகள். மனம் முழுவதும் முருகப் பெருமானின் அலைகள். இதுவும் ஒரு தியான நிலையே....
அடுத்து வரும் வரிகளை நோக்கினால் ...பாச வினைகள் பற்றது நீங்கி முக்திநிலை அடைய உணருளாக அன்னமும் சொர்ணமும் வேண்டும். இங்கு இறைவனைதேட அன்னமும் வேண்டும் சொர்ணமும் வேண்டும் இல்லையேல் மனம் இரை-உணவு  தேடும் நிலையே இருக்கும் என்பதால் ..மற்றும் உன்னருளாக அவை வேண்டும் என்பதிலே ஒரு விளக்கம் எனக்கு தோன்றுகிறது.
பாற்கடலை கடைந்து லஷ்மி வெளிப்பட்ட போது கூடவே அழையா இணைப்பாக அவள் சகோதரி அலஷ்மி அதாவது மூதேவி வெளிப்பட்டதாக சொல்வர். இன்று பலரும் தேடி அலைவது லஷ்மியை ..அவளோடு இணைந்துவரும் அலஷ்மி மனஅழுத்தம் ,இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,தூக்கம் இன்மை எனும் பல இலவசங்கள் இணைப்புகள். கிடைத்த செல்வத்தை அனுபவிக்க முடியாமல் தடுப்பவை. மெத்தை வாங்கியும் தூக்கத்தை வாங்க முடியா நிலை. இதற்கு சிக்கென பிடித்தேன் உன் பதம் முருகா....
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க  வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க  வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்  வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்  பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து  மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்  

'வாழ்க ' ....தமிழுக்கு சிறப்பு  'ழகரம் ' 
தமிழ் கடவுள் முருகனின் சிறப்பு அழகு.
தமிழுக்கு அமிழ்தென்று பேர் . இந்த சிறப்பு ழகரத்தை உச்சரிக்கும்  போது நாக்கு மேல் அன்னத்தை 
தொடுவதால் பினியல் சுரப்பி ஊக்கம் பெறுகிறது.அதனால் அறிவும் அழகும் மேலோங்கும்.மெய்ஞானம் 
மிளிரும். வாழ்க வாழ்க என்று சொல்லும் போது நாம் மேம்பட்டு வாழ்வோம்.

குற்றவுணர்வு மனிதனை முடமாக்கும் ஒன்று.தவறிழைக்கா மனிதர் இல்லை .பெற்ற தாயும் தந்தையும் 
தங்கள் குழந்தைகள் மேல் வெறுப்பைக் காட்டுவதில்லை அதுபோல் நீயும் வள்ளியுமே என் 
பெற்றோர்கள் எனவே என் மீது அன்பும் அருளும் பொழிவை முருகா என வேண்டி மனம் ஒன்றிய பரவச 
நிலையில் நேர்மறை எண்ணங்களை( Affirmations ) விதைக்கின்றோம்....தொடரும் .